லக்னோ,
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள பிரபல வணிக வளாக திரையரங்கில், சர்க்கரை நோய்க்கான அவசர மருத்துவப் பெட்டியுடன் படம் பார்க்க வந்த பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் ஜோத்ஸ்னா ரங்கீன். அவர் ‘டைப் 1’ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர். இவர் தனது ரத்த சர்க்கரை அளவு திடீரென குறைந்தால் அதனைச் சரிசெய்வதற்காக, எப்போதும் அவசர மருத்துவப் பெட்டி ஒன்றை வைத்திருப்பது வழக்கம். இந்த நிலையில் சமீபத்தில் நொய்டாவில் உள்ள பிவிஆர் ஐநாக்ஸ் (PVR INOX) திரையரங்கிற்கு படம் பார்க்கச் சென்றபோது, அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் அவரது மருத்துவப் பெட்டியை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி மறுத்தனர்.
இது குறித்து அந்தப் பெண் திரையரங்க மேலாளரிடம் முறையிட்டபோது, அவர் மிகவும் அலட்சியமாகப் பதிலளித்தார். "இதுபோன்ற நோய் உள்ளவர்கள் திரையரங்கிற்கு படம் பார்க்க வரக்கூடாது" என மேலாளர் தகாத முறையில் கூறியதாக ஜோத்ஸ்னா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, திரையரங்க நிர்வாகத்திற்கு எதிராகப் பொதுமக்களின் கண்டனங்கள் குவியத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கோரியது. மேலும், "மருத்துவத் தேவைகளுக்கான அவசரப் பெட்டிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் திரையரங்கிற்குள் எடுத்துச் செல்ல எப்போதும் அனுமதியுண்டு என்று தெரிவித்தது. மேலும், ஊழியர்களின் இந்த செயலுக்கு வருந்துகிறோம்" என நிர்வாகத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.