நாக்பூர்,
மராட்டிய மாநிலம் நாக்பூர் பாலாஜிநகர் பகுதியை சேர்ந்தவர் புருசோத்தம் (வயது 82). இவர் கடந்த மாதம் 22-ந்தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அவர் காரை ஏற்றி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி காட்சி பதிவாகி இருந்தது.
இதுதொடர்பாக கொலையான புருசோத்தம் மகன் பாக்டேவின் மனைவியும், நகர திட்டமிடல் துறை உதவி இயக்குனருமான அர்ச்சனா(53) மீது போலீசாரின் சந்தேகப்பார்வை விழுந்தது. அவரை பிடித்து நடத்திய விசாரணையில் குட்டு அம்பலமானது.
பலியான புருசோத்தமுக்கு சொந்தமாக ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருந்தது. இந்த சொத்தை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர அர்ச்சனா கருதினார். இதற்காக தனது கணவரின் கார் டிரைவர் மற்றும் கூட்டாளிகள் 2 பேரின் மூலம் மாமனாரை காரை ஏற்றி கொன்றுவிட்டு விபத்து போன்று சித்தரிக்க முயற்சி செய்தது அம்பலமானது. இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அரசு அதிகாரி அர்ச்சனாவை கைது செய்தனர். தலைமறைவான டிரைவர் உள்பட 3 கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.