ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் மது குடிப்பதை கண்டித்த மனைவியை கணவன் வீட்டின் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவருக்கு திருமணமாகி மணிஷா என்ற மனைவி உள்ளார்.
இதனிடையே மது பழக்கத்திற்கு அடிமையான ராகேஷ் தினமும் குடித்துவிட்டு தனது மனைவி மணிஷாவை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மது குடிப்பதை நிறுத்தும்படி தனது கணவரை அடிக்கடி வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில், ராகேஷ் நேற்று இரவு மீண்டும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, மது குடிப்பதை கண்டித்து ராகேசிடம் மணிஷா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ராகேஷ் தனது மனைவி மணிஷாவை வீட்டின் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.
இதில் தலையில் படுகாயமடைந்த மணிஷாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.