தேசிய செய்திகள்

கணவரை கொன்று குளியல் அறையில் புதைத்த பெண் - உத்தர பிரதேசத்தில் பயங்கரம்

குளியல் அறையின் தரையில் புதிதாக டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 44 வயதான சுரேந்திரகுமார் சர்மா என்பவர், கடந்த மே மாதம் 18-ந்தேதி திடீரென மாயமாகி உள்ளார். அவரது மனைவி ரூபி, இது குறித்து மே 26-ந்தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது கணவரை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் தனது புகாரில் அவர் கூறியிருந்தார்.

அதோடு உறவினர்கள் அனைவரிடமும் தனது கணவர் எங்கு போனார் என்பது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று ரூபி கூறி வந்துள்ளார். இதனிடையே, இந்த வழக்கை விசாரித்த போலீசாருக்கு ரூபி மீது சந்தேகம் திரும்பியது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் ரூபியின் மீது சந்தேகம் மேலும் வலுத்தது.

இதையடுத்து வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், உயிரிழந்த சுரேந்திரகுமார் சர்மாவின் சகோதரர் அளித்த முக்கிய தகவலின் அடிப்படையில் ரூபியின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது குளியல் அறையின் தரையில் புதிதாக டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனால் போலீசார் அந்த இடத்தை தோண்டிப் பார்க்க முடிவு செய்தனர். அவ்வாறு அந்த இடத்தை தோண்டியபோது, குளியல் அறைக்கு கீழே சுரேந்திரகுமாரின் சடலம் புதைக்கப்பட்டிருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், ரூபியிடம் இது குறித்து விசாரணை நடத்தியபோது அவர் தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவரது உடலை குளியல் அறையின் கீழே புதைத்துவிட்டு, தடயங்களை மறைப்பதற்காக புதிய டைல்ஸ் பதித்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், ரூபியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கையில், சுரேந்திரகுமார் சர்மாவுக்கு மதுப்பழக்கம் இருந்ததாகவும், அதனால் தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.