தேசிய செய்திகள்

கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண்... காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவர்

தனது மனைவி இனி தன்னுடன் வரப்போவதில்லை என்பதை புரிந்துகொண்ட ஜீவநாத், அவரது ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்தார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் சந்தவுளி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜீவநாத் ராஜ்பார். இவரது மனைவி சரிதா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஜீவநாத் டெல்லியில் தங்கியிருந்து வெல்டிங் வேலை செய்து வரும் நிலையில், மனைவி சரிதாவும், 3 குழந்தைகளும் சந்தவுளி மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.

கணவர் வெளியூரில் இருந்த சமயத்தில் 45 வயதான சரிதாவுக்கு, 25 வயதான அஜய் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இளைஞர் அஜய் ரெயிலில் பட்டாணி விற்பனை செய்து வருகிறார். இவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இந்நிலையில், சரிதா சில நாட்களுக்கு முன்பு தனது கள்ளக்காதலன் அஜய்யுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதையறிந்து அவரது கணவர் ஜீவநாத் தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். தனது மனைவியை தேடி பல இடங்களில் அலைந்து திரிந்த அவர், கடந்த வாரம் ரெயில் நிலையம் ஒன்றில் தனது மனைவி சரிதாவையும், அவரது கள்ளக்காதலன் அஜய்யையும் கண்டுபிடித்தார்.

அப்போது அவர் சரிதாவிடம் தன்னுடன் வந்துவிடுமாறு கெஞ்சி கேட்டார். ஆனால் சரிதாவோ, தனது வாழ்நாள் முழுவதும் இனி அஜய்யுடன்தான் வாழப்போவதாக உறுதியாக தெரிவித்துவிட்டார். தனது மனைவி இனி தன்னுடன் வரப்போவதில்லை என்பதை புரிந்துகொண்ட ஜீவநாத், அவரது ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்தார்.

அதன்படி அஜய் மற்றும் சரிதாவை பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற ஜீவநாத், தனது மனைவி சரிதாவுக்கும், அவரது காதலன் அஜய்க்கும் திருமணம் செய்து வைத்தார். இது குறித்து ஜீவநாத் கூறுகையில், “நான் சரிதாவுடன் வாழ விரும்பினேன். ஆனால் அவளுக்கு விருப்பமில்லை. எனவே என்னால் முடிந்ததை அவளுக்காக செய்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.

அதே சமயம் சரிதா தனது திருமண வாழ்க்கை முறிந்துபோனதற்கு ஜீவநாத் தான் காரணம் என்று கூறியுள்ளார். குடும்ப செலவுகளை சமாளிக்க ஜீவநாத் போதிய அளவில் பணம் அனுப்பவில்லை என்றும், அடிக்கடி தன்னுடன் சண்டையிட்டு வந்தார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.