பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து கே.ஏ. 57 எப் 6331 பி.எம்.டி.சி.) பஸ் என்ற பதிவு எண் கொண்ட பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக (பி.எம்.டி.சி.) பஸ் நேற்று காலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அந்த சமயத்தில் கண்டக்டர் தான் டிக்கெட் விற்ற கட்ட ணத்தை ஒரு பையில் போட்டு அதனை டிரைவர் இருக்கை அருகே உள்ள என்ஜின் மீது வைத்திருந்தார்.
மற்ற பயணிகளிடம் அவர் கியூ.ஆர். கோடு கருவி மூலம் பணம் பெற்று டிக்கெட் கொடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தார். அப்போது ஒரு பெண் பயணி, கண்டக்டரின் பணப்பையை திருடி தனது பைக்குள் போட்டு கொண்டார். பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு வந்த கண்டக்டர் பணப்பை மாயமாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் பயணிகளிடம் விசாரித்ததில் மர்ம பெண் என்ஜின் அருகே வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் கண்டக்டர் விசாரித்துள்ளார். ஆனால் அந்த பெண் தான் பணப்பையை எடுக் கவில்லை என கூறி நாடகமாடினார். ஓடும் பஸ்சிலேயே இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தது. இதையடுத்து போக்குவரத்து பெண் போலீசிடம் டிரைவர் சம்பவத்தை கூறினார்.
இதையடுத்து அந்த பெண் போலீஸ் வந்து, மர்ம பெண் வைத்திருந்த பையை சோதனையிட்டார். அதில் கண்டக்டரின் பணப்பை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்த பெண் யாரோ, அந்த பையை திருடி தனது பையில் போட்டுவிட்டதாக கதைகட்டினார். இதையடுத்து அந்த பெண், தானியங்கி கதவு பஸ் என்பதால், டிரைவரிடம் கதவை திறக்கும்படி கூறி கெஞ்சினார்.
மேலும் தனது கணவர் உடல் நலம் சரியில்லாதவர் என்றும், தன்னை நம்பி குழந்தைகள் இருப்பதாகவும், வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றும் திரும்ப திரும்ப கூறியபடி இருந்தார். இருப்பினும் அந்த பெண்ணை, பெண் போலீஸ், கண்டக்டர். டிரைவர் ஆகியோர் சேர்ந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெண்ணை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.