தேசிய செய்திகள்

6 ஆண்டுகளுக்கு முன் தனக்கு நடந்த வன்கொடுமை குறித்து கணவரிடம் கூறிய பெண்... அடுத்து நடந்த சம்பவம்

தனது மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையை கேட்ட கணவர், உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், அந்த பெண் 6 ஆண்டுகளுக்கு முன் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தனது கணவரிடம் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அந்த பெண் கடந்த 2019-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, அவரது பக்கத்து வீட்டில் இருந்த முதியவர் தர்ஷத் பட்டேல்(வயது 60) என்பவர், மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகும் தர்ஷ்த் பட்டேல் தொடர்ந்து அந்த பெண்ணை அச்சுறுத்தி வந்ததோடு, பலமுறை அவரை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

பயம் காரணமான இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைந்த அப்பெண், திருமணத்திற்குப் பிறகு தனது கணவரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதைக் கேட்ட கணவர், தனது மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். உடனடியாக இது குறித்து போலீசில் அவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் தர்ஷத் பட்டேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்ட பெண் மைனர் சிறுமியாக இருந்துள்ளார் என்பதால், தர்ஷத் பட்டேல் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.