புதுடெல்லி,
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் ஒரு பெண் ஒப்பந்த ஊழியரை மானபங்கப்படுத்தியதாக, ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தலைமை செயலகமோ, சாலையோ எந்த இடமாக இருந்தாலும், உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக உத்தரபிரதேச அரசு சொல்வதன் உண்மை நிலவரம் இதுதான்.
ஒருபெண், தான் கொடுத்த பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், வீடியோ எடுத்து வெளியிட வேண்டி இருக்கிறது. அப்படியானால் அவர் எவ்வளவு பொறுமை காத்திருப்பார்? பெண்கள் அனைவரும் அவருக்கு துணையாக நிற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.