மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்ததன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என்று பாஜக குற்றம் சாட்டி வரும் நிலையில், பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொது அவர் கூறியதாவது:
அனைத்துக் கட்சிகளாலும் 2023-ல் நிறைவேற்றப்பட்ட முந்தைய மகளிர் நல மசோதாவை அவர்கள் கொண்டுவரட்டும். இதற்காக வரும் திங்கள் கிழமையே நாடாளுமன்றத்தைக் கூட்டி, மசோதாவை கொண்டுவரட்டும். யார் பெண்களுக்கு எதிரானவர்கள் என்பது அப்போது தெரியும். நாங்கள் அனைவரும் உங்களுக்கு(அரசுக்கு) ஆதரவாக வாக்களிப்போம்.
நேற்று நடைபெற்றது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். நாட்டின் மைய கட்டமைப்பை மாற்ற முயன்ற சதி முறியடிக்கப்பட்டது. அரசியலைமைப்புக்கும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றி இதுவாகும். பெண்களுக்கு எந்தப் பயனும் இல்லாத மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்தது; நாட்டில் வசிக்கும் பெண்கள் முட்டாள்கள் அல்ல” என்றார்.