புதுடெல்லி,
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. மிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து, இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது. இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட், இந்து மல்கோத்ரா ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ச்சியாக 8 நாள்கள் விசாரணை நடத்தியது. இதையடுத்து, மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி ஒத்திவைத்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. அதில், பெண்களை வழிபாட்டு தலங்களுக்குள் அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய தடை இல்லை என்றும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். இதுகுறித்து தேவசம்போர்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மதத் தலைவர்களுடன் ஆலோசித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.