தேசிய செய்திகள்

மகளிருக்கு மாதம் ரூ. 1,500 வழங்கப்படும்: மம்தா பானர்ஜி வாக்குறுதி

வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 7-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அங்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.மேற்கு வங்காளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள மம்தா பானர்ஜி, இந்த முறையும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளார். அதேவேளையில், பாஜக ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.

தேர்தலை முன்னிட்டு, மம்தா பானர்ஜி தனது வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். “திதியின் 10 வாக்குறுதிகள்” என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புகளில் பல்வேறு கவர்ச்சிகர அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.குறிப்பாக, மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதி உதவி ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ரூ.1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், ரூ.500 உயர்த்தப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவை சேர்ந்தவர்களுக்கு ரூ.1,700 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக ரூ.30,000 கோடி மதிப்பிலான விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.