பெங்களூரு,
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குப்பி தாலுகா செங்காவி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி தேவம்மா (வயது 50). இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார். இந்தநிலையில் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணத்தால், லட்சுமி தேவம்மா கடந்த சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் ஆழ்துளை கிணறு தோண்டும் தொழிலாளி நாகராஜ் (55), என்ற நபருடன் லட்சுமி தேவம்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. மேலும் இவர்கள் 2 பேரும், தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதற்கிடையில் லட்சுமி தேவம்மாவுக்கு அதே பகுதியை சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த நாகராஜ், லட்சுமி தேவம்மாவை கண்டித்துள்ளார்.
இருப்பினும் இதனை கேட்காத லட்சுமி தேவம்மா, வாலிபருடனான பழக்கத்தை தொடர்ந்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த நாகராஜ் தான் ஆழ்துளை கிணறு தோண்டும் ஒரு தோட்டத்துக்கு வரும்படி லட்சுமி தேவம்மாவை அழைத்துள்ளார். அவரும் நாகராஜ் கூறிய இடத்துக்கு சென்றார். அங்கு தனியாக இருந்த நாகராஜ், லட்சுமி தேவம்மாவிடம் உல்லாசம் அனுபவித்துள்ளார்.
பின்னர் வாலிபர் குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே, லட்சுமி தேவம்மாவை உருட்டு கட்டையால் தலையில் நாகராஜ் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த லட்சுமி தேவம்மா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் அவரது உடலை தோட்டத்தின் மறைவான பகுதிக்கு இழுத்துச் சென்று தீ வைத்து எரித்துள்ளார்.
இதையடுத்து மறுநாள் காலையில் தோட்டத்து உரிமையாளர் பாதி எரிந்த நிலையில் பெண் கிடந்த பிணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது.
இதையடுத்து பாதி எரிந்த நிலையில் கிடந்த லட்சுமி தேவம்மா உடலை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு துமகூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக் காதலன் நாகராஜை நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.