திருவனந்தபுரம்,
கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக நாடு முழுவதும் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவி வருகிறது.
வடமாநிலங்களில் இந்த நோய்த்தொற்று பரவலாக பரவி வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கேரளா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக இளம் பெண் உயிரிழந்துள்ளார். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 32 வயது பெண் பலியாகியுள்ளார்.
கேரளாவில் இதுவரை 15 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கேரளாவில் கருப்பு பூஞ்சை நோயால் பாதித்தவரின் கண் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட்டுள்ளது. 62 வயதான அப்துல் காதர் என்பவருக்கு கண் அகற்றப்பட்டுள்ளது.