தேசிய செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு 9 ஆண்டு சிறை

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கூடுதல் நிதியுதவி வழங்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

பாலக்காடு,

பாலக்காடு மாவட்டம் விளையன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (வயது 65). இவர் கடந்த 2024-ம் ஆண்டு அந்த பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அவர்கள் அளித்த புகாரின் பேரில் குழல்மண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கு பாலக்காடு சிறப்பு போக்சோ கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சி.சிந்து தங்கமணி, குற்றம் சாட்டப்பட்ட ராமனுக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால், கூடுதலாக 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கூடுதல் நிதியுதவி வழங்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.