தேசிய செய்திகள்

ஓடும் ரெயிலில் பெண் பயணியை பெல்ட்டால் தாக்கிய வாலிபர் கைது

வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

மும்பை கோரேகாவில் இருந்து சி.எஸ்.எம்.டி. நோக்கி மின்சார ரெயில் ஒன்று நேற்று முன்தினம் மாலை 5.30 மணி அளவில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயிலில் பெண் பயணி ஒருவர் காலியாக இருந்த இருக்கையில் படுத்து இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெட்டியில் ஏறிய முகமது ரிஸ்வான் (வயது 36) என்ற பயணி, இருக்கையில் அமர்வது தொடர்பாக பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது முகமது ரிஸ்வான் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி பெல்ட்டால் தாக்கியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ பரவியதை தொடர்ந்து, அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.