தேசிய செய்திகள்

கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வாலிபருடன் போதைப்பொருள் விற்ற இளம்பெண்

பீர்மேடு அருகே உள்ள ஏலப்பாரா பகுதியை சேர்ந்த ரிசானா பாத்திமா.

எர்ணாகுளம்,

கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் அருகே உள்ள ஏரமல்லூர் பகுதியை சேர்ந்தவர் அனந்து பிரசாத் (வயது 24). இவரது தோழி இடுக்கி மாவட்டம் பீர்மேடு அருகே உள்ள ஏலப்பாரா பகுதியை சேர்ந்த ரிசானா பாத்திமா (19). இவர் கோதமங்கலத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இதற்காக இடுக்கியில் இருந்து வந்து கோதமங்கலம் பகுதியில் தங்கி இருந்தார்.

பின்னர் சில மாதங்களிலேயே தனது முதலாமாண்டு பட்டப்படிப்பை நிறுத்தி விட்டு, அனந்து பிரசாத் உடன் சேர்ந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார். இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கோதமங்கலம் கலால் துறை அதிகாரி பிரமோத் மற்றும் கலால் துறையினர் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது 2 பேரும் தினமும் ரூ.3 ஆயிரம் வாடகை உள்ள ஓட்டல் அறைகளில் தங்கி ஆடம்பரமாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இந்தநிலையில் அனந்து பிரசாத், ரிசானா பாத்திமா ஆகிய 2 பேரும் தங்கி இருந்த ஓட்டல் அறையை சுற்றி வளைத்து கலால் துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள எம்.டி.எம்.ஏ. என்ற உயர்ரக போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப் பட்டது. விசாரணையில் 2 பேரும் போதைப்பொருளை பதுக்கி வைத்து விற்று வந்தது தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் கலால் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.