தேசிய செய்திகள்

காதல் வலையில் ஆண்களை சிக்கவைத்து நூதன மோசடி... கோடிகளில் புரண்ட இளம்பெண் கைது

மிரட்டலுக்கு பணியாமல், பணம் கொடுக்க மறுத்த 5 பேரை பல்லவி காவல்துறையில் போலியான புகார்களில் சிக்கவைத்துள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் பல்லவி சிங் ராஜ்புட். இவர் டேட்டிங் செயலியில் வெவ்வேறு பெயர்களில் கணக்குகளை தொடங்கி அதில் இருக்கும் இளைஞர்களிடம் ஆசையாக பேசி காதல் வலை வீசியுள்ளார். இவ்வாறு பேச்சில் ஆரம்பித்து, பின்னர் நேரடி சந்திப்புகள் நடைபெறும்.

அப்போது சம்பந்தப்பட்ட இளைஞர்களுடன் உடல் அளவில் நெருக்கம் காட்டி அவர்களின் ஆசையை தூண்டும் விதமாக பல்லவி நடந்து கொள்வார். அந்த இளைஞர்களும் பல்லவியின் வலையில் விழுந்து அவருடன் நெருக்கம் காட்டத் தொடங்கும் சமயத்தில், அவர்களின் அந்தரங்க, ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பல்லவி எடுத்து வைத்துக் கொள்வார்.

இதன் பின்னர் பல்லவி தனது சுயரூபத்தை காட்டத் தொடங்குவார். தன்னிடம் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி, சம்பந்தப்பட்ட இளைஞர்களை மிரட்டி அவர்களிடம் பணம் கேட்கத் தொடங்குவார். இவ்வாறு பல இளைஞர்களை தனது காதல் வலையில் வீழ்த்தி அவர்களிடம் இருந்து பல்லவி பணம் பறித்துள்ளார். இதில் யாராவது பணம் தர மறுத்தார்கள் என்றால், அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துவிடுவதாக பல்லவி மிரட்டியுள்ளார்.

இவரது மிரட்டலுக்கு பணியாமல் பணம் கொடுக்க மறுத்த 5 பேரை பல்லவி காவல்துறையில் போலியான புகார்களில் சிக்கவைத்ததாகவும் கூறப்படுகிறது. தனது மோசடி செயல்கள் ஒவ்வொன்றையும் நேர்த்தியாக திட்டமிட்டு பல்லவி செய்து முடித்துள்ளார். இதன் மூலம் கிடைத்த பணத்தில் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், இத்தகைய ஒரு மோசடி சம்பவம் டேட்டிங் செயலி மூலம் அரங்கேற்றப்பட்டு வருவது குறித்து வழக்கறிஞர் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியபோதுதான் பல்லவியின் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இதுவரை அவர் பல்வேறு ஆண்களை ஏமாற்றி சுமார் 6 கோடி ரூபாய் வரை பணம் பறித்துள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தற்போது பல்லவியை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.