பாட்னா,
பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டம் பதேபூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் யு.பி.எஸ்.சி. நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், அதில் 440 வது ரேங்க் பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகியுள்ளதாக கிராம மக்களிடம் ரஞ்சித் குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த கிராமமே கொண்டாட்டத்தில் களை கட்டியது.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் ஷேக்புரா தொகுதி முன்னாள் ஆர்.ஜே.டி. எம்.எல்.ஏ. விஜய் சாம்ராட் தனது ஆதரவாளர்களுடன் ரஞ்சித் குமார் வீட்டுக்கு சென்று பூங்கொத்தும், பரிசும் கொடுத்து வாழ்த்தினார். மேலும் உள்ளூர் போலீசார் மஹுலி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து ரஞ்சித் குமாருக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த சூழலில் அந்த கிராமத்தின் இளைஞர்கள் சிலர் யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளை சரிபார்த்த போது, 440-வது ரேங்க் பெற்றது ஷேக்புரா ரஞ்சித் குமார் அல்ல, கர்நாடகாவின் சிக்கபள்ளாபூரை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பது தெரிய வந்தது. அவர் ஏமாற்றியது தெரியவரவே அந்த ஊரே அதிர்ச்சியில் மூழ்கியது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தகவல் அறிந்ததும் ரஞ்சித் குமார் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் டெல்லி சென்றுள்ளதாகவும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கவில்லை என்றும் குடும்பத்தினர் கூறினர். யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றதாக ரஞ்சித் வேண்டும் என்றே ஏமாற்றினாரா அல்லது தான் தேர்ச்சி பெற்றுவிட்டதாக தவறுதலாக நம்பினாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றதாக ஏமாற்றிய இளைஞர் ரஞ்சித் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். ரஞ்சித் யாதவை பாராட்டி கலந்துரையாடிய காவல் ஆய்வாளரே, தற்போது அவரை கைதும் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.