லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டம் ராஸ்ரா என்ற கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார்.
இது குறித்து அந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பெயரில் கடந்த மாதம் 16-ம் தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த புகாரில் தனது மகளை அதே பகுதியை சேர்ந்த இளைஞன் கடத்தி சென்றுவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதனை தொடர்ந்து காணாமல் போன சிறுமியை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படும் இளைஞனின் இருப்பிடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இளைஞனை கைது செய்தனர். மேலும், கடத்தப்பட்ட சிறுமியையும் போலீசார் மீட்டனர்.
இதனை தொடர்ந்து அந்த இளைஞனிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளைஞன் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.