தேவனஹள்ளி,
துபாயில் இருந்து பெங்களூருவுக்கு நூதன முறையில் தங்கம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். பாதுகாப்பு படையினர் சோதனையில் அவர் சிக்கி இருந்தார்.
பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருட்கள் தொடர்ந்து கடத்தப்படுகிறது. இவ்வாறு கடத்தும் தங்கம் மற்றும் போதைப்பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதுடன், சம்பந்தப்பட்ட நபர்களையும் கைது செய்து வருகிறார்கள்.
அதன்படி, துபாயில் இருந்து கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகள், அவர்களது உடைமைகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதற்கிடையில், விமான நிலையத்தில் சந்தேகப்படும் படியாக சுற்றிய வாலிபரை பிடித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விசாரித்தனர்.
ஆனால் அந்த நபர், பாதுகாப்பு படையினர் கேட்ட கேள்விகளுக்கு பதில் எதுவும் சொல்லாமல் இருந்தார். இதனால் அவர் மீது மேலும் சந்தேகம் வலுத்தது. உடனே அவரை சோதனை நடத்திய போது, வாய்பகுதியில் 2 தங்க துண்டுகள் இருந்ததை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். உடனே துப்பாக்கி குண்டு மாதிரியில் இருந்த 2 தங்க துண்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வாலிபரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவரது பெயர் முகமது சிராஜ் என்று தெரிந்தது.
இவர் துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து, சுங்கத்துறை அதிகாரிகளிடம் இருந்து தப்பித்திருந்தார். பின்னர் 2 தங்க துண்டுகளையும் வாயில் போட்டப்படி வெளியே செல்ல முயன்ற முகமது சிராஜ் மத்திய பாதுகாப்பு படையினரிடம் சிக்கியது தெரியவந்தது. அவரிடம் இருந்து 82 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான முகமது சிராஜ் மீது விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.