தேசிய செய்திகள்

காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகி வீடுபுகுந்து படுகொலை; அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கார்வாட் மாவட்ட காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகி பெரோஸ் பதான். இவர் கார்வாட் மாவட்ட காங்கிரஸ் இளைஞரணி பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், பெரோஸ் பதான் நேற்று இரவு ஹஸ்மிநகரில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அப்போது வீட்டிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், பெரோஸ் பதானை கடுமையாக தாக்கி படுகொலை செய்தது.

பதானை படுகொலை செய்தப்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று பெரோஸ் பதானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பெரோஸ் பதானை படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெரோஸ் பதான் படுகொலை சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவான நிலையில் அவற்றை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.