இந்த பிழைப்பு பிழைக்கிறதுக்கு பேசாம பிச்சை எடுக்க போயிடலாம் போல என விளையாட்டாக பலரும் சொல்வதை பார்த்து இருப்போம். அப்படி பிச்சை எடுத்தால் எவ்வளவு வருமானம்தான் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வதற்காக பிரபல யூடியூபர் ஒருவர் நேரடியாக பிச்சைக்காரராக வேடமிட்டு பிச்சை எடுத்து இருக்கிறார். ஒருநாள் கூட முழுதாக பிச்சை எடுக்கவில்லை. ஆனால் அதற்குள் கிடைத்த வருமானத்தை ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்ததாக தனது யுடியூப் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. யூடியூபர் புருஷோத்தம் விஷிஸ்த் என்பவர்தான், இந்த விசித்திர பரிசோதனையில் இறங்கி அதனை வீடியோவாகவும் வெளியிட்டு இருக்கிறார். இது குறித்த விவரங்கள் பின்வருமாறு:
புரோஷத்தமும் அவரது நண்பர் சச்சினும் ஹரித்வாரில் உள்ள சிவன் கோயிலுக்கு திருவிழா நாளில் சென்று இருக்கிறார்கள். புருஷோத்தமின் நண்பரான சச்சின் பிச்சைக்காரர் போல வேடமிட்டு கோவிலில் பிச்சை எடுக்க போயிருக்கிறார். அதுவும் ஹைடெக் பிச்சைக்காரராக சென்று இருக்கிறார். அதாவது கழுத்தில் கியூஆர் கோட் ஒன்றை தொங்கவிட்டபடி பிச்சை எடுக்க சென்றுள்ளார். பார்ப்பதற்கு பிச்சைக்கார் போலவே இருக்க வேண்டும் என்பதற்காக அழுக்குபடிந்த கிழிந்த துணிகளை உடுத்திக்கொண்டு, முகத்தையும் அழுக்காக்கி கொண்டு பிச்சை எடுக்கும் இடத்திற்கு சென்று தனது வேலையை ஆரம்பித்தார். இந்த பரிசோதனை முயற்சியில் எவ்வளவு பணம் கிடைத்தது என்று தெரிந்தால் வாயடைத்து போவீர்கள்.
சுமார் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை கிடைக்கும் என்று இருவரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். ஆனால் 8 மணி நேரத்தில் 4 ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்து இருக்கிறது. இதே அளவு தொகையை ஒருவர் தினமும் சம்பாதித்தால், ஒரு மாதத்தில் சுமார் ரூ.1.2 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும் என்றும் யூடியூபர் புருசோத்தம் கூறினார். பிச்சை எடுப்பதற்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிக சிரமம் இருப்பதாக இருவரும் தெரிவித்தனர். நாள் முழுவதும் தொடர்ந்து பலரிடம் சென்று பிச்சை கேட்பது மிகவும் சோர்வை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரே நாளில் ரூ.4,000 கிடைத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மத வழிபாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலா பகுதிகளில் பிச்சை எடுப்பது சிலருக்கு வாழ்வாதாரமாக மாறிவிட்டதா என்றும் சிலர் கேள்வி எழுப்பினர். அதேவேளையில், ஒரு நாள் மட்டும் நடத்தப்பட்ட பரிசோதனையை வைத்து, உண்மையில் பிச்சையை நம்பி வாழும் மக்களின் அன்றாட கஷ்டங்களை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.