புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 24 லட்சத்து 28 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 279 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 36 லட்சத்து 48 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 263 பேர் உயிரந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 13 கோடியே 54 லட்சத்து 78 ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசி தடுப்பாடு, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த மருந்தை ஜைடஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
விராபின், லேசான அறிகுறியால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் வெற்றிகரமாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஆன்டிவைரலுடன் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளில் 91.15 சதவீதம் பேர் நாள் 7 க்குள் ஆர்டி-பி.சி.ஆர்சோத்னையில் கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டது. இந்த சிகிச்சையானது நோயாளிகளுக்கு துணை ஆக்ஸிஜனின் மணிநேரத்தையும் குறைக்கிறது.
நாடு முழுவதும் 20-25 மையங்களில் சோதனை நடத்தப்பட்டது, விராபின் எடுத்து கொண்ட நோயாளிகளுக்கு குறைவான துணை ஆக்ஸிஜன் தேவை என்பதைக் காட்டியது. கொரோனா வைரசுக்கு சிகிச்சையளிப்பதில் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருந்த சுவாசக் கோளாறு மற்றும் தோல்வியை இந்த ஆன்டிவைரல் கட்டுப்படுத்த முடியும் என்பதை சோதனைகள் சுட்டிக்காட்டுகின்றன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.