பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் சென்னப்பட்டணா தாலுகாவை சேர்ந்தவர் நிரஞ்சன். இவருக்கு திருமணமாகி நாகமணி என்ற மனைவியும், சாத்விக் (வயது 4) என்ற மகனும் உண்டு. தம்பதி பெங்களூருவில் தங்கி வேலை செய்து வந்தனர். சாத்விக் தனது தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்தான்.
இந்தநிலையில் சாத்விக் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன் இருந்த செருப்பு வைக்கும் ஸ்டாண்டில் இருந்து, தனது செருப்பை எடுத்துள்ளான். அப்போது செருப்பில் பதுங்கியிருந்த நாகப்பாம்பு ஒன்று சிறுவனின் கையை கடித்தது. பின்னர் சிறுவனை அவனது தாத்தா சிகிச்சைக்காக சென்னப்பட்டணா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி சிறுவன் நேற்று காலையில் பரிதபாமாக இறந்தான். இதுகுறித்து சென்னப்பட்டணா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.