தேசிய செய்திகள்

ஜம்முவில் மோதலைத் தடுக்க நடவடிக்கை: சமூக வலைதளங்களுக்கு 60 நாட்கள் தடை

போலிச்செய்திகளை பரப்புவோர் மீது பாரதிய நாகரிக் சசுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜம்மு,

காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட 60 நாட்கள் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ராகேஷ் மின்ஹாஸ் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:-

‘சாதி, மதம் மற்றும் மொழிரீதியாக பகைமையை உருவாக்கும் வகையிலான வாசகங்கள், வீடியோக்கள், மீம்ஸ்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது. போலிச் செய்திகளைப் பரப்புவோர் மீது பாரதிய நாகரிக் சசுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறுபவர்களுக்கு அபராதம் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்க சட்டத்தில் இடமுண்டு. வாட்ஸ்அப், பேஸ்புக் குழுக்களின் அட்மின்கள் தங்கள் குழுவில் இத்தகைய பதிவுகள் வராமல் தடுக்க வேண்டும். மீறினால் அவர்களும் சட்டரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் போன்றவற்றை பயன்படுத்தி சமூக மோதல்களை தூண்டும் வகையிலான போலிச்செய்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.