புதுடெல்லி,
டெல்லியின் மால்வியா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஓட்டலின் உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் ஓட்டலின் சமையல்காரரின் கவனக்குறைவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டது. என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சமையல்காரரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டவுடன், கட்டடத்தின் அடித்தளத்தில் தீ மளமளவென எரிந்ததால், கட்டடத்தில் சிக்கியவர்கள் வெளியேற முடியாமல் அங்கும் இங்கும் ஓடினர்.
இதனையடுத்து, சிலர் வேறு வழியின்றி ஜன்னல்கள் வழியாக மேலிருந்து கீழே குதிக்க முயற்சித்தனர்.
இதனிடையே, ஓட்டலில் எதிரே மெத்தை கடை வைத்திருந்த ரியாசுதீன் என்பவர், ஓட்டலின் மேலிருந்து கீழே விழுபவர்களுக்கு காயமடையாமலிருக்க, தன் கடையிலிருந்த மெத்தைகளை சாலையில் பரப்பி உதவினர்.
சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மெத்தைகளை ரியாசுதீன் சாலையில் பரப்பியதன் மூலம், தீ விபத்தில் சிக்கிய 8 பேர் பத்திரமாகக் கீழே குதித்து காப்பாற்றப்பட்டனர். இந்த நிலையில், ரியாசுதீனின் மனிதநேயத்துக்காக அவருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.