தேசிய செய்திகள்

நாக்பூரில் பயங்கர வெடி விபத்து: 17 பேர் பலி; 18 பேர் காயம்

நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாக்பூர்,

மராட்டிய மாநிலம், கட்டோல் தெஹ்சிலில் உள்ள ரௌல்கானில் சுரங்க மற்றும் தொழில்துறை வெடிபொருள் உற்பத்தி செய்யும் எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடிவிபத்து நிகழ்ந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இதில் 17 பேர் பலியாகினர். 18 பேர் காயம் அடைந்தனர்.

வெடி விபத்து நடந்த உடனேயே காயமடைந்தவர்கள் நாக்பூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட் பிரதிநிதிகள் கூறுகையில், இந்த சம்பவம் நிறுவனத்தின் டெட்டனேட்டர் பேக்கிங் யூனிட்டில் காலை 7 மணி முதல் காலை 7.15 மணி வரை நடந்தது.

இன்று அதிகாலை வழக்கம் போல் ரவுல்கான் எஸ்பிஎல்லில் தொழிலாளர்கள் தங்கள் பணியினை செய்து கொண்டிருந்தனர். பேக்கிங் பிரிவில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து நாங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்றும் அந்நிறுவன அதிகாரி கூறியுள்ளார்.