தேசிய செய்திகள்

பிரதமர் மோடி நாளை கர்நாடகா, தெலுங்கானா பயணம்

பிரதமர் மோடி நாளை இரவு விமானம் மூலம் குஜராத் புறப்பட்டு செல்கிறார்.

ஐதராபாத்,

பிரதமர் மோடி நாளை கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். பெங்களூருவில் நடைபெறும் வாழும் கலையின் 45வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பின்னர், பெங்களூருவில் உள்ள வாழும் கலையின் சர்வதேச மையத்தில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

கர்நாடகா பயணத்தை முடித்துக்கொண்டு உடனடியாக பிரதமர் மோடி தெலுங்கானா செல்கிறார். தெலுங்கானாவின் ஐதராபாத் செல்லும் பிரதமர் மோடி, ரூ. 9 ஆயிரத்து 400 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித்திட்டப்பணிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

கர்நாடகா, தெலுங்கானா பயணத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி நாளை இரவு விமானம் மூலம் குஜராத் புறப்பட்டு செல்கிறார். குஜராத் செல்லும் பிரதமர் மோடி நாளை மறுதினம் சோம்நாத் கோவிலில் நடைபெறும் சோம்நாத் அம்ருத் மோட்சவ் விழாவில் பங்கேற்கிறார். அந்நிய படையெடுப்புகளால் பெரும் சேதமடைந்த சோம்நாத் கோவில் மீண்டும் புனரமைக்கப்பட்டதன் 75ம் ஆண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.