கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள சென்னல்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் மகன் வேல்முருகன் (வயது 27) வக்கீல். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் இடப் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
கடந்த 11-ந் தேதி செல்வம் உள்ளிட்டவர்கள், சமாதானம் பேசுவதாக வேல்முருகனை வீட்டுக்கு அழைத்து சென்று அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னல்பட்டியை சேர்ந்த அருள்ராஜ் (19), கால்வாய் பகுதியை சேர்ந்த மகேஷ் ஆகியோரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அருள்ராஜ் நேற்று காலையில் கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.