செய்திகள்

லிபியா உள்நாட்டுப்போரில் திருப்பம்: திரிபோலியை அரசுப்படைகள் கைப்பற்றின

லிபியா உள்நாட்டுப்போரில் திருப்பமாக, திரிபோலியை அரசுப்படைகள் கைப்பற்றி உள்ளன.

திரிபோலி,

எண்ணெய் வளமிக்க லிபியாவில் நீண்ட காலம் ஆட்சிப்பொறுப்பில் இருந்த முயாமர் கடாபி, 2011-ம் ஆண்டு நேட்டோ ஆதரவு படைகளால் பதவி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டார். அதன்பின்னர் அந்த நாடு உள்நாட்டு போரில் சிக்கி தவித்தது.அந்த நாட்டின் தலைநகரான திரிபோலியை கடந்த ஆண்டு முதல் முன்னாள் தளபதி ஜெனரல் கலிபா ஹப்தாரின் படைகள் முற்றுகையிட்டு வந்தன. அந்தப் படைகளுக்கு ரஷிய படைகள் ஆதரவு அளித்து வந்தன.

ஆனால் லிபியா அரசுக்கு துருக்கி படைகள் ஆதரவு அளித்தன.இந்த நிலையில் நீண்டதொரு போராட்டத்துக்கு பின்னர் திரிபோலி நகரை ஐ.நா. ஆதரவு அரசு படைகள் முற்றிலும் கைப்பற்றி விட்டன. அங்கிருந்த ரஷிய படைகள் பின்வாங்கி விட்டன. திரிபோலியின் முழுக்கட்டுப்பாடும் இப்போது அரசுப் படைகள் வசம் வந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திரிபோலி நகரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் கைப்பற்றி இருப்பது லிபிய அரசு படைகளுக்கு கிடைத்துள்ள வலுவான அடையாள வெற்றியாக பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT