செய்திகள்

‘மோடி அரசின் பகடைக்காய்’ என நான் கூறியது நிரூபணமாகி விட்டது - விஜய் மல்லையா சொல்கிறார்

மோடி அரசின் பகடைக்காய் என தான் கூறியது நிரூபணமாகி விட்டதாக விஜய் மல்லையா கூறினார்.

லண்டன்,

பிரதமர் மோடி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், விஜய் மல்லையா செலுத்த வேண்டிய கடன்களை விட அதிகமாக, ரூ.14 ஆயிரம் கோடி மதிப்புள்ள அவருடைய சொத்துகளை பறிமுதல் செய்து விட்டோம் என்று கூறியிருந்தார்.

இதை சுட்டிக்காட்டி, விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் செலுத்த வேண்டிய கடன்களை விட அதிகமான சொத்துகளை பறிமுதல் செய்து விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதன்மூலம், மோடி அரசு தன்னை பகடைக்காயாக பயன்படுத்துவதாக நான் ஏற்கனவே கூறியது சரி என்று நிரூபணமாகி விட்டது.

முழுமையாக கடன்களை திரும்ப பெற்று விட்டதாக உயர்ந்த அதிகாரம் படைத்தவரே சொன்ன பிறகும், பா.ஜனதா செய்தித்தொடர்பாளர்கள் ஏன் இன்னும் என்னைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்? இவ்வாறு விஜய் மல்லையா கூறியுள்ளார்.