வில்லியனூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் ஜெயஸ்ரீ (வயது 21). இவருக்கும், புதுவை மடுகரை ராம்ஜி நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான அருண்ராஜ் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்குப்பின் அருண்ராஜ் வீட்டில் ஜெயஸ்ரீ வசித்து வந்தார். 5 மாத கர்ப்பிணியான ஜெயஸ்ரீக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது பெற்றோர் சடங்கு நிகழ்ச்சி நடத்தினர்.
அப்போது ஜெயஸ்ரீயை தங்கள் வீட்டுக்கு அழைத்து செல்வதாக அவரது குடும்பத்தினர் அருண்ராஜ் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். அதற்கு அவர்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறையொட்டி ஜெயஸ்ரீ விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயஸ்ரீ, கணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அலறியடித்து அருண்ராஜ் வீட்டுக்கு வந்தனர். அங்கு ஜெயஸ்ரீ தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர்.
தகவல் அறிந்த நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று ஜெயஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெயஸ்ரீயின் சாவு குறித்து அவரது தாய் விஜயா போலீசில் புகார் அளித்தார். அதில், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயஸ்ரீக்கு திருமணமாகி 5 மாதமே ஆவதால் அவரது சாவு குறித்து தாசில்தார் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
குடும்ப தகராறில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மடுகரையில் சோகத்தை ஏற்படுத்தியது.