ஏரல்,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அகரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 68). விவசாயியான இவர் கூலி வேலைக்கும் சென்று வந்தார். அதே ஊரில் வடக்கு தெருவில் வசிப்பவர் கணேசன் (55) விவசாயி. இவருடைய தம்பி காசி. இவர், ஜெயராஜிடன் கூலி வேலைக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கணேசனுக்கும், அவருடைய தம்பி காசிக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. அப்போது காசிக்கு ஆதரவாக ஜெயராஜ் பேசினார். இதனால் ஜெயராஜிக்கும், கணேசனுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலையில் ஜெயராஜ் அப்பகுதியில் உள்ள டீக்கடையின் முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கணேசன் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென்று ஜெயராஜை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த ஜெயராஜ் அலறி துடித்தவாறு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே கணேசன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
வயிறு, மார்பு உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்த ஜெயராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும், ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கணேசனை வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஜெயராஜிக்கு சந்திரலேகா என்ற மனைவியும், செல்வகுமார் என்ற மகனும், கோட்டாளசெல்வி என்ற மகளும் உள்ளனர். ஏரல் அருகே விவசாயி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.