புதுடெல்லி,
டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்த பின்னர் தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
என் வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்காக பாடுபடுவேன், ராகுல் காந்தி கூறும் வழியில் நடப்பேன். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது கட்சிக்காக உழைத்ததை விட, தற்போது இன்னும் அதிகம் உழைப்பேன்.
ராகுல் காந்தி தான் என்னை தலைவராக நியமித்தவர் எனவே மரியாதை நிமித்தமாக சந்தித்து நன்றி தெரிவித்தேன். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு, வாழ்த்துக்கள்.
அமெரிக்காவில் ரஜினியை சந்திக்கவில்லை. எந்த பதவியும் இல்லாமல் சாதாரண தொண்டனாக இருந்து கூட நான் பணியாற்றுவேன். புகாரால் என்னை நீக்கவில்லை, தலைவர் பதவியில் இருந்து நீக்கியதால் எந்த மன கசப்பும் இல்லை.
தொடர்ந்து இரண்டரை வருடம் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்ததே மிகப்பெரிய சாதனை தான். ப.சிதம்பரம் தலைவர் அல்ல என்றும், அவர் தனது நண்பர் என்றும் திருநாவுக்கரசர் விளக்கம் அளித்தார்.