புதுடெல்லி,
சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய பதவி நீட்டிப்பு கடந்த நவம்பர் 30-ந் தேதியுடன் முடிவடைந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்குகள் தொடர்பான ஆவணங்களை அந்த பிரிவின் உயர் அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு அவருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததோடு, சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை அந்த பிரிவின் உயர் அதிகாரியிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு கடந்த திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் இந்த வழக்கில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் அதிகாரி பொன் மாணிக்கவேல் இதுவரை எந்த ஆவணத்தையும் ஏ.டி.ஜி.பி.யிடம் தாக்கல் செய்யவில்லை. கடந்த மாதம் 30-ந் தேதியுடன் அவருடைய பதவி காலம் முடிவடைந்த பிறகும் அந்த ஆவணங்களை அதிகார வரம்புக்கு மீறி தன்னிடம் வைத்துள்ளது சட்டவிரோத செயலாகும்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் ஆவணங்களை ஒப்படைக்காமல் பொன் மாணிக்கவேல் மேலும் இழுத்தடித்தால் அவர் மீது சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று கூறினார்.
இந்த நிலையில் பொன் மாணிக்கவேல் மீது சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.