கவுகாத்தி,
அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். கவுகாத்தியில் தலைமைச் செயலகம் அருகில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு போலீசார் பாதுகாப்புக்காக வைத்திருந்த தடுப்புகளை வீசி எறிந்தனர். பல மாணவர்கள் பள்ளி சீருடையிலேயே வந்திருந்தனர்.
முக்கிய சாலைக்குள் நுழைய முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். போலீசாரையும் மீறி அவர்கள் தலைமைச் செயலகத்தில் நுழைய முயன்றதால் போராட்டத்தை ஒடுக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினார்கள். அப்போதும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் ரப்பர் குண்டுகளால் சுட்டனர். தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
அப்போது போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதும், சிறிது நேரத்தில் மீண்டும் கூடுவதுமாக இருந்தனர். போராட்டக்காரர்களும் போலீசாரை கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கினார்கள். இதனால் தலைமைச் செயலகம் முன்பு போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய போராட்டம் பல மணி நேரம் நீடித்தது.
அந்த பகுதியில் உள்ள சாலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் சந்தித்து பேசுவதற்காக அமைக்கப்பட்டு இருந்த மேடையையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். தலைமைச் செயலகம் முன்பு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து வைக்கப்பட்டு இருந்த பேனர்கள், விளம்பர பலகைகளையும் உடைத்து நொறுக்கினர்.
பா.ஜனதாவின் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான இந்த அரசு காட்டுமிராண்டித்தனமானது. குடியுரிமை திருத்த மசோதாவை திரும்பப்பெறும் வரை நாங்கள் எந்த அழுத்தத்துக்கும் அடிபணியமாட்டோம் என்று மாணவர் சங்க தலைவர் கூறினார். போலீசார் நடத்திய தடியடியில் பல போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர்.
திப்ருகாரிலும் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டனர், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினார்கள். இந்த சண்டையில் ஒரு பத்திரிகையாளரும் கல்வீச்சில் காயம் அடைந்தார். அங்கு சாலை மற்றும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
எந்த அமைப்போ, அரசியல் கட்சியோ போராட்டம் அல்லது முழு அடைப்போ அறிவிக்கவில்லை என்றாலும், ஆங்காங்கே தன்னிச்சையான போராட்டங்கள் வெடித்தன. நெடுஞ்சாலைகளில் மரக்கட்டைகளையும், பழைய டயர்களையும் போட்டு எரித்தனர். பல நகரங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. லக்வாவில் எண்ணெய் கிணறு அமைந்துள்ள பகுதியில் போராட்டக்காரர்கள் சிலர் நுழைய முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ரெயில் மறியல் போராட்டம் காரணமாக சுமார் 15 ரெயில்கள் நிறுத்தப்பட்டன அல்லது வேறு வழிகளில் திருப்பிவிடப்பட்டன. பா.ஜனதாவின் எம்.பி., மாநில மந்திரி உள்ளிட்ட தலைவர்களின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. சில மந்திரிகளுக்கு கருப்பு கொடி காட்டப்பட்டது.
ஜோரட், கொலாகாட், திப்ருகார், தின்சுகியா, சிவசாகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டம் வெடித்தது. முதல்-மந்திரியின் சொந்த ஊரான சாபுவாவில் கண்டன மோட்டார்சைக்கிள் பேரணி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.