பெங்களூரு,
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறி இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.
அந்த நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்கவும், அவர்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவும் வகை செய்யும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளதென மத்திய அரசு கூறியுள்ளது. இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதைப்போல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் இந்த சட்டத்தை எதிர்த்து உள்ளன. குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு கொண்டு வந்ததற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் பேரணிகளும், போராட்டங்களும் நடந்து வருகின்றன.
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் மற்றும் எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டங்களில் ஈடுபட்டோருக்கு இடையே நடந்த மோதல் வன்முறையாக வெடித்ததில் பலர் பலியாகினர். நேற்று வரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு நகரில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி ஒன்று கடந்த 20ந்தேதி நடந்தது. இந்த பேரணியில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் ஓவைசி கலந்து கொண்டார்.
பேரணியில் கலந்து கொண்டவர்களில் அமுல்யா லியோனா என்ற இளம்பெண் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷம் எழுப்பினார். அவரை தடுத்து நிறுத்திய ஓவைசி, இந்த சம்பவத்திற்கு கண்டனமும் தெரிவித்து உள்ளார்.
இதனை அடுத்து அந்த இளம்பெண் மீது 124ஏ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், பெங்களூரு நீதிமன்றம் ஒன்று அமுல்யாவின் நீதிமன்ற காவலை வருகிற மார்ச் 5ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது.