வாஷிங்டன்,
உலகின் மிகச்சிறந்த சமாதான தூதர்களுக்கு அமெரிக்க நாடாளுமன்ற தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
மரணத்துக்கு பிந்தைய நிலையில், இந்த தங்கப்பதக்கத்தை தேசப்பிதா மகாத்மா காந்திக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, அமெரிக்காவில் எழுந்துள்ளது. மகாத்மா காந்தியின் அகிம்சையையும், சமாதானத்தையும் அங்கீகரித்து கவுரவிக்கிற வகையில், நாடாளுமன்ற தங்கப்பதக்கம் வழங்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் 6 எம்.பி.க்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தீர்மானத்தை நியூயார்க் பெண் எம்.பி., கரோலின் மலோனி, இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் அமி பெரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோகன்னா, பிரமிளா ஜெயபால், துளசி கப்பார்டு ஆகியோர் கொண்டு வந்தனர்.
இந்த பதக்கத்தை ஏற்கனவே அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா, போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால், தலாய்லாமா உள்ளிட்டவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மகாத்மா காந்தியின் பிறந்த தினம், சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்பட்டதையொட்டி ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் ஒரு அறிக்கை விடுத்தார்.
அந்த அறிக்கையில் அவர் மகாத்மா காந்தியின் அகிம்சை தத்துவத்தை உலகம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.