தமிழக துணை முதல் அமைச்சரும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், வரும் சட்டசபைத் தேர்தலில் தொகுதி மாறி போட்டியிட இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில் போட்டியிட அதிகம் பேச்சு எழுந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த உதயநிதி ஸ்டாலினிடம் இது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: “சட்டசபைத் தேர்தலில் மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை முடிவு செய்யும்” என்று கூறினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் 93,285 வாக்குகள் பெற்று வென்றார். அவரை எதிர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டது. பாமக சார்பில் போட்டியிட்ட ஏ.வி.ஏ. கஸ்ஸாலி 23,930 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன் மூலம் 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.