அரசியல் களம்

சட்டசபை தேர்தலில் போட்டியா? - நடிகை குஷ்பு பதில்

தி.மு.க. ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது என்று நடிகை குஷ்பு கூறினார்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் நடிகையும், பா.ஜனதா மூத்த தலைவருமான குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

யார் எந்த தொகுதியில் போட்டியி டவேண்டும் என்பதை கட்சியே முடிவு செய்யும். கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதையே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம். தி.மு.க. ஆட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

தி.மு.க. ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள் நடமாட்டத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் நான் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லை. நான் போட்டியிட விருப்ப மனுகூட அளிக்கவில்லை.

எந்த தொகுதி, எத்தனை தொகுதி கிடைக்கும் என்பது குறித்து இன்னும் பேச்சுவார்த்தை முடிவடையவில்லை. அதனால் தற்போது எதையும் உறுதியாக சொல்ல முடியாது. நடிகர் விஜய், உற்சாகமாக அரசியலுக்கு வந்தது குறித்து அவரிடமே கேட்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் சேருவது குறித்து பேசுபவர்களுக்கு பதில் சொல்ல முடியாது. தி.மு.க.வின் கடைசி தேர்தல் இதுதான். இவ்வாறு அவர் கூறினார்.