அரசியல் களம்

திமுக - காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக உள்ளது - விஜய் வசந்த்

கூட்டணி குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தான் முடிவு எடுக்கும் என விஜய் வசந்த் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பாகோட்டில் இணைப்பு பாலம், பல்நோக்குக்கட்டிடம் கட்ட ரூ.20 லட்சம் மற்றும் ரூ.10லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இன்று அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு மூன்று மாதத்திற்குள் வந்துவிடும் என்றார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த விஜய் வசந்த் கூறியதாவது:-

2026 சட்டப்பேரவை தேர்தல் கள நிலவரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக உள்ளது. அனைவரும் தேர்தல் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வருகிறார்கள் என்றார்.

அடுத்தாக தவெகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராக இருப்பதாக கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளாரே? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த விஜய் வசந்த், அவரது சொந்த கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். கூட்டணி குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தான் முடிவு எடுக்கும். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அவர்கள் இணைந்து கூட்டணி குறித்து முடிவு எடுப்பார்கள். திமுகவுடன் கூட்டணி இணக்கமாக தான் இருக்கிறது நேற்றைய முன்தினம் கூட தமிழக முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் கன்னியாகுமரி வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்து பல நலத்திட்டங்களை செய்திருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.