அரசியல் களம்

திமுகவினர் எப்போதுமே கூட்டணி கட்சியினரை மதிக்கமாட்டார்கள்: செல்லூர் ராஜு

தேசிய ஜனநாயக கூட்டணி முழுவடிவத்தோடு அழகாக அமைக்கப்பட்டு இருக்கிறது என்று செல்லூர் ராஜு கூறினார்.

மதுரை,

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மக்களில் ஒருவராக இருப்பதால் எனக்கு மக் கள் ஓட்டு போடுகிறார்கள், இல்லையென்றால் போயிட்டு வாங்கனு சொல்லி இருப்பார்கள். நிறைய வளர்ச்சி பணிகளை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கொண்டு உள்ளேன். தேசிய ஜனநாயக கூட்டணி முழுவடிவத்தோடு அழகாக அமைக்கப்பட்டு இருக்கிறது. அதில் அதிமுக பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டார்.

திமுக கூட்டணியில்தான் குரல் எழுப்புகின்றனர். திருமாவளவனை திமுகவினர் புலம்ப வைத்துவிட்டார்கள். காங்கிரஸ் போர்க்குரல் எழுப்பி உள்ளது. அந்த கூட்டணியில் காங்கிரசுக்கு மரியாதை இல்லை. திமுகவினர் எப்போதுமே கூட்டணி கட்சியினரை மதிக்கமாட்டார்கள்.

1999-ல் வைகோ எங்களுடன் இருந்தபோது அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. இப்போது வயதாகிவிட்டதால் மறந்துவிட்டார் என்பதால் நினைவூட்டுகிறேன். அதிமுகவுடன் இருந்ததால்தான் பம்பரம் சின்னம் கிடைத்தது. இந்த சட்டமன்ற தேர்தலில் கூடுதலாக 4 சீட்டு வாங்க வேண்டும் என்பதற்காக வைகோ பேசுகிறார்.

ராஜகண்ணப்பன் ஒரு கட்சியில் நிலையாக இருக்கமாட்டார். ஜெயலலிதா அவரை அடையாளப்படுத்தி பதவி கொடுத்தார். ஆனால் ஜெயலலிதாவுக்கு எதிராக கட்சி தொடங்கி இரட்டை இலையை முடக்க நினைத்தார். ராஜகண்ணப்பன் பேச்சையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுக்கக்கூடாது. என்னை தோற்கடிக்க திமுகவினர் கூடுதலாக பணம் வீசுவார்கள். எங்கள் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.