அரசியல் களம்

திமுக கவுன்சிலர் உட்பட 5 முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்

திமுக வேட்பாளர் அறிவிப்பில் ஏற்பட்ட அதிருப்தியே இந்த மாற்றத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்கான திமுக வேட்பாளராக வி.ஜி.ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, கட்சியின் உள்ளகத்தில் அதிருப்தி நிலவி வந்தது. இதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் நகராட்சி 14வது வார்டு திமுக கவுன்சிலர் அருணா ஜெயகிருஷ்ணன் தலைமையில் பலர் கட்சியை விட்டு விலகினர்.

அவர்களுடன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலகப் பிரிவு செயலாளர் ஜெயகிருஷ்ணன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் திலீப்குமார், மாவட்ட தொழில்நுட்பப் பிரிவு துணை அமைப்பாளர் சரத்குமார், நகர பொறியாளர் அணி அமைப்பாளர் மனோஜ் மற்றும் நகர இளைஞரணி நிர்வாகி சுனில்குமார் ஆகியோரும் இணைந்தனர்.

இவர்கள் அனைவரும், திருவள்ளூர் அதிமுக வேட்பாளரும், மேற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த இணைப்பு நிகழ்வில் பேசிய அதிமுக நிர்வாகிகள், “அதிமுகவின் வளர்ச்சிக்கும், திருவள்ளூர் தொகுதியில் வெற்றிக்கும் இந்நிகழ்வு ஒரு முக்கிய முன்னேற்றமாக அமையும்” என தெரிவித்தனர்.

இதுகுறித்து திமுக வட்டாரங்களில் பேசப்படுவது என்னவென்றால், வேட்பாளர் அறிவிப்பில் ஏற்பட்ட அதிருப்தியே இந்த மாற்றத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும், இதனால் திருவள்ளூர் தொகுதியில் தேர்தல் சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது. இந்த திடீர் கட்சி மாற்றம், அடுத்தடுத்த நாட்களில் அரசியல் நிலவரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.