அரசியல் களம்

‘பா.ஜ.க. வெற்றி பெற்றால் புதிய நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்’ - திருவண்ணாமலையில் ஜே.பி.நட்டா பிரசாரம்

தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரம் அதிகரித்துள்ளதாக ஜே.பி.நட்டா குற்றம்சாட்டினார்.

திருவண்ணாமலை,

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் அண்ணாசிலை முன்பாக நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் சி.ஏழுமலையை ஆதரித்து மத்திய மந்திரி ஜே.பி.நட்டா உரையாற்றினார்.

அவர் பேசுகையில், திருவண்ணாமலை பா.ஜ.க. வேட்பாளர் ஏழுமலையை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மக்களிடம் வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரம், குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மத்திய அரசின் நலத்திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, நெடுஞ்சாலை மற்றும் ரெயில்வே வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்டு விளக்கிய அவர், மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம், வறுமை ஒழிப்பு, விவசாய உதவித்தொகை உள்ளிட்ட பல திட்டங்கள் கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்துள்ளதாக கூறினார். வரும் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் புதிய நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.