சென்னை,
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். அதிரடியான பேச்சால் நாம் தமிழர் கட்சியில் சீமான், சாட்டை துரைமுருகனுக்கு அடுத்தபடியாக அதிகம் அறியப்பட்ட நபராக காளியம்மாள் விளங்கினார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் வட சென்னை தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது 60,000 வாக்குகள் பெற்றார்.
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு சுமார் 1,20,000 வாக்குகள் பெற்று கவனம் ஈர்த்தார். இதற்கிடையே, காளியம்மாளுக்கும், சீமானுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதையடுத்து, கடந்த 2025 பிப்ரவரி மாதம் அவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகினார். காளியம்மாள் விஜய்யின் தவெகவில் இணையலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், திடீர் திருப்பமாக காளியம்மாள் அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் காளியம்மாளுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.