சென்னை,
பாமக, உள்கட்சி பிரச்சினை தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த மாதம் 26-ந்தேதி தள்ளுபடி செய்தது.
அந்த உத்தரவில், "சட்டம் அனுமதித்தால், இந்த விவகாரம் தொடர்பாக டாக்டர் ராமதாஸ், தேர்தல் ஆணையத்தை அணுகலாம். அவரது கோரிக்கையை தேர்தல் ஆணையம் சட்டப்படி பரிசீலித்து முடி வெடுக்கலாம்" என்றும் கூறியிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதுசம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டை அணுகும்படி உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர் மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு டாக்டர் ராமதாஸ் தரப்பில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை சுட்டிக்காட்டி, சின்னம் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட் டது. அதற்கு நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினர்.
இந்த நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில், ராமதாஸ் தரப்பில் இன்று மீண்டும் முறையீடு செய்யப்பட்டது. தங்கள் வழக்கை இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனு எண்ணிடப்படாமல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. எண்ணிடப்பட்டால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.