அரசியல் களம்

ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியில்லை: அமைச்சர் காந்தியின் மகன் வினோத் அறிவிப்பு

என் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்த தலைவர் ,சகோதரர், உதயநிதிக்கு இதயம் கனிந்த நன்றி என்று வினோத் கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்திக்கு பதிலாக அவரது மகன் வினோத் காந்திக்கு திமுக தலைமை சார்பில் சீட் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், தனக்கு தராமல் மகனுக்கு சீட் ஒதுக்கப்பட்டதால் அமைச்சர் காந்தி அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், வினோத் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாமல் இருந்தார். இந்த நிலையில், ராணிப்பேட்டை தொகுதியில் தான் போட்டியிடவில்லை என்று வினோத் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வினோத் காந்தி கூறியிருப்பதாவது: 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்து, என்னை நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த தலைவருக்கும், சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், என் தந்தையார் மீண்டும் போட்டியிடும் உறுதியான விருப்பத்தை கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன்.

என்னை உறுதியாக ஆதரித்து, நம்பிக்கை அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னும் நீண்ட வாழ்க்கை முன் உள்ளது என்பதில் உற்சாகத்துடன், சேவை செய்து சாதிக்க நான் உறுதியுடன் இருக்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.