சென்னை,
இயக்குனர் அமீர் வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி விட்டு வந்துள்ளேன். தமிழ்நாட்டைப் பொருத்தவரை, மாநில சுயாட்சியும் தமிழ்நாட்டு உரிமைகளையும் காக்கும் கட்சிகளுக்கே என் வாக்கை எப்போதும் செலுத்துவேன்.இளைஞர்கள் வாக்களிப்பது மிகவும் முக்கியம். உங்கள் கடமையை செய்ய தவறிவிட்டு, ‘எங்களுக்கு அது கிடைக்கவில்லை, அடிப்படை வசதிகள் இல்லை’ என்று கேட்பதற்கு எந்த உரிமையும் இல்லை. முதலில் வாக்களித்து விட்டு தான் கேட்க வேண்டும்.
எல்லாரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். வரலாறு என்ன, வாழ்வாதாரம் என்ன, அரசியல் என்ன என்பவற்றை முன்னிறுத்தியே வாக்களிக்க வேண்டும். எனக்கு ஒருவரைப் பிடிக்கும் என்பதற்காக வாக்களிக்கக் கூடாது. நான் எந்த நிலையில் இருக்கிறேன், என் மாநிலம் எந்த நிலையில் இருக்கிறது, மாநிலத்திற்கான தேவைகள் என்ன, உரிமைகள் என்ன? இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் வாக்களிக்க வேண்டும்.ஒருவரைப் பிடிக்கும் என்பதற்காக வாக்களிப்பது எனக்கு ஏற்புடையது அல்ல. மாற்றத்தை விட முன்னேற்றம் தான் முக்கியம்,” என்று அவர் கூறினார்.