சென்னை,
சட்டமன்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இரண்டு தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் எதிர்பார்ப்பதாக புதிய தமிழகம் கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர் கட்சி, த.வெ.க. என 4 முனை போட்டி உருவாகி உள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. தி.மு.க. தங்கள் தோழமை கட்சிகளுடன் கூட்டணியை வலுப்படுத்தி, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
இதேபோல, அ.தி.மு.க.வும் தங்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க., அன்புமணியின் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், இக்கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெறுமா என கேள்வி எழுந்துள்ளது. அதிக தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கும் நிலையில், பேச்சுவார்த்தை இழுபறியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தி.மு.க. கூட்டணியில் புதியதமிழகம் கட்சி இடம்பெற பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து புதிய தமிழகம் கட்சி விரைவில் முடிவு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2026 சட்டமன்றத் தேர்தல்: புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம்
2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து, புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம், வருகின்ற மார்ச் 5-ஆம் தேதி (05.03.2026) வியாழக்கிழமை மதியம் 2:30 மணிக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA அவர்களின் தலைமையில், கோவை, குனியமுத்தூர் 'பொதிகை இல்லத்தில்' நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 300-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) வாயிலாக தனித்தனியே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.