சிவகாசி,
சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் விலைவாசி உயர்வால், ஒவ்வொரு குடும்பத்திலும் மாதந்தோறும் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கூடுதல் செலவு ஆகிறது என்று பெண்கள் வேதனையுடன் தெரிவித்தனர். கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் வரை கூடுதலாக ஒவ்வொரு குடும்பத்தினரும் செலவு செய்துள்ளனர். இதனால் தி.மு.க. ஆட்சி வேண்டாம் என்றும், அ.தி.மு.க. ஆட்சிதான் வேண்டும் எனவும், எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதல்-அமைச்சராக மீண்டும் பதவி ஏற்க வேண்டும் என்றும் மக்கள் விரும்புகிறார்கள்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தையும், கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தையும் செங்கோட்டையன் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது நகைப்புக்குரியது. தி.மு.க.வுக்கு போட்டி த.வெ.க.தான் என்று சிலர் கூறிக்கொள்கிறார்கள். தேர்தல் முடிவு அவர்களுக்கு உண்மையை உணர்த்தும். அ.தி.மு.க.தான் பலமான கட்சி. எடப்பாடி பழனிசாமிதான் பலமான தலைவர். அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியே வெற்றி பெறும். டி.டி.வி.தினகரன் வருகையால் அ.தி.மு.க.வுக்கு கூடுதல் பலம்.
தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கூட்டணிக்காக யார் வீட்டு கதவையும் எடப்பாடி பழனிசாமி தட்டமாட்டார். நாங்கள் பலமானவர்கள். அ.தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்தால் ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். கூட்டணிக்காக யாரிடமும் மடிப்பிச்சை கேட்கும் நிலையில் அ.தி.மு.க. இல்லை. அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.